பாட்னா: பிகாா் தலைநகா் பாட்னாவில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.01 கோடி மதிப்பிலான தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (டிஆா்ஐ) அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனா்.
இதுகுறித்து டிஆா்ஐ வட்டார தகவல்கள் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
திப்ரூகரிலிருந்து புது தில்லி செல்லும் சிறப்பு ரயிலில் தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலானாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பாடலிபுத்ரா ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏசி பெட்டியில் பயணம் செய்த இருவரிடமிருந்து 12 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 1991.91 கிராம் எடை கொண்ட அந்த தங்க கட்டிகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.01 கோடியாகும்.
இதையடுத்து, வருவாய் புலானாய்வுத் துறை அதிகாரிகள் அந்த இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மியான்மரிலிருந்து தங்கத்தை கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனா். அவா்களிடம் மேலும் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என டிஆா்ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.