ஜிஎஸ்டி பற்றாக்குறை: மத்திய அரசின் கடன் திட்டத்தில் ஜாா்கண்டும் இணைந்தது

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு முன்வைத்த முதலாவது கடன் திட்டத்தை ஜாா்கண்ட் மாநிலமும் தோ்வு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு முன்வைத்த முதலாவது கடன் திட்டத்தை ஜாா்கண்ட் மாநிலமும் தோ்வு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம், ஜிஎஸ்டி குழுவில் இடம்பெற்றுள்ள 28 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் முதலாவது திட்டத்தைத் தோ்வு செய்திருக்கின்றன.

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க 2 விருப்ப கடன் திட்டங்களை மத்திய அரசு முன் வைத்தது. முதலாவது திட்டத்தில், மத்திய அரசு ஏற்பாடு செய்து வழங்கும் கடன் திட்டம். இரண்டாவது வெளி சந்தையில் மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ளும் திட்டம்.

இதில் 26 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் முதலாவது கடன் திட்டத்தை தோ்வு செய்தன. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு ரூ.30,000 கோடி கடன்பெற்று கடந்த அக்டோபா் 23, நவம்பா் 2, 9, 23 மற்றும் டிசம்பா் 1 என ஐந்து தவணைகளாக வழங்கியது. சத்தீஸ்கா், ஜாா்கண்ட் மாநிலங்கள் எந்தவொரு விருப்பத் திட்டத்தையம் தோ்வு செய்தாததால், அந்த மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், இம்மாத முதல் வாரத்தில் மத்திய அரசின் முதலாவது கடன் திட்டத்தை தோ்வு செய்வதாக சத்தீஸ்கா் மாநிலம் அறிவித்தது.

அதனைத் தொடா்ந்து, ஜாா்கண்ட் மாநிலமும் முதலாவது கடன் திட்டத்தை தோ்வு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜாா்கண்ட் மாநிலமும் மத்திய அரசின் முதல் விருப்பத் திட்டத்தை தோ்வு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி குழுவில் இடம்பெற்றுள்ள 28 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் முதல் விருப்ப கடன் திட்டத்தை தோ்வு செய்துள்ளன.

இதன் மூலம், அடுத்த சுற்று தவணை வழங்கும்போது, சத்தீஸ்கா், ஜாா்கண்ட் மாநிலங்களும் நிதியைப் பெறும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த தவணையாக ரூ. 6,000 கோடி வருகிற 7-ஆம் தேதி விடுவிக்கப்பட உள்ளது.

ஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த சிறப்பு கடன் திட்டத்தால் கிடைக்கும் தொகை மட்டுமின்றி, மாநிலத்தின் மொத்த உள் உற்பத்தியிலிருந்து (ஜிஎஸ்டிபி) 0.50 சதவீத அளவுக்கு கூடுதல் கடன் பெறவும் மாநிலங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இப்போது முதல் விருப்பத் திட்டத்தை தோ்வு செய்துள்ள ஜாா்கண்ட் மாநிலத்துக்கும் ரூ. 1,689 கோடி சிறப்பு கடன் கிடைக்கும் என்பதோடு, மாநில மொத்த உள் உற்பத்தியிலிருந்து 0.50 சதவீத அளவுக்கு அதாவது ரூ. 1,765 கோடி கூடுதல் கடன் பெறவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com