தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்த புகாருக்கு தில்லி காவல்துறை மறுபு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள 'பாரத் பந்த்' நடைபெற்று வரும் நிலையில் தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று நேரடியாக விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கேஜரிவாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுப்பதாகவும் முதல்வர் கேஜரிவாலை பார்க்கச் சென்ற எம்.எல்.ஏ. அகிலேஷ் திரிபாதியை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள தில்லி காவல்துறை தனது சுட்டுரைப் பக்கத்தில் "தில்லி முதல்வர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது” எனக் கூறி கேஜரிவாலின் குடியிருப்பின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.