புதுதில்லி: சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக 2020-2021-ஆம் கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெற முடியாமல் ஆன்லைனில் முடிந்த அளவுக்கு கற்று வருகிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதிக்கான அட்டவணையை மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வழங்கிய பரிந்துரைகளை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதிகள் மற்றும் அட்டவணையை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். இதனை தனது சுட்டுரை பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான தேவையான ஏற்பாடுகளை சிபிஐ செய்து வருவதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.