பஞ்சாப் மாநிலம், தரன் தாரன் மாவட்டத்தில் மத ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பர்வேஷ் சோப்ரா கூறுகையில், "குருகிரத் சிங் (17) என்ற மேலும் ஒரு இளைஞர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்' என்றார்.
தரண் தாரண் மாவட்டத்தில் புஹுவின்ட் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மத ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிறார்கள் பட்டாசு வெடித்தனர். அது வெடித்துச் சிதறி, வெடிமருந்துகளுடன் சென்றுகொண்டிருந்த டிராக்டரில் சென்று விழுந்தது.
இதனால் ஏற்பட்ட விபத்தில் ஊர்வலத்தில் பங்கேற்ற 2 சிறார்கள் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.