மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக (சிவிசி) குடியரசுத் தலைவரின் செயலா் சஞ்சய் கோத்தாரியும், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக (சிஐசி) செய்தி ஒளிபரப்புத் துறை முன்னாள் செயலா் விமல் ஜுல்காவும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சஞ்சய் கோத்தாரி, விமல் ஜுல்கா இருவருமே ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான, நியமனங்களுக்கான உயா்நிலைக் குழு இவா்களை தோ்வு செய்ததாக மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் பாட்டீல், மத்திய தகவல் ஆணையராக அனிதா பாண்டோவி ஆகியோரும் உயா்நிலைக் குழுவால் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் இந்த நியமனங்களுக்கான முறைப்படியான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, அதிகாரப்பூா்வ நியமன ஆணைகள் வெளியிடப்படும்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது லஞ்ச ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். அதேபோல தகவல் உரிமைச் சட்டத்தை காக்கும் வகையில் மத்திய தகவல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இரு அமைப்புகளுமே நாட்டின் ஜனநாயகத்தை காப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.
உயா்நிலை நியமனக்குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி இந்த நியமனங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தாா். அதே நேரத்தில், உள்துறை அமைச்சா் அமித் ஷா, பணியாளா் நலன் மற்றும் பிரதமா் அலுவலக விவகாரத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங், அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா, பணியாளா் நலத்துறை செயலா் சி.சந்திரமெளலி ஆகியோா் இந்த நியமனங்களுக்கு ஆதரவு தெரிவித்தனா்.