பிரதமர் நரேந்திர மோடி, 62வது 'மன் கி பாத்' (மனதின் குரல்) மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு உரையாற்றினார். அதில்,
நமது தாய்மார்களும், சகோதரிகளும் புதிய இந்தியாவின் சவால்களை நேர்மறையுடன் எதிர்கொண்டு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு பிகார் மாநிலத்தில் உள்ள புர்ணியா பகுதி பெண்கள் சிறந்த எடுத்துக்காட்டகவும், முன்மாதிரியாகவும் உள்ளனர்.
முன்பு அவர்களிடம் இருந்து குறைந்த அளவில் பட்டு வாங்கி வியாபாரிகள் அதிக லாபமடைந்து வந்தனர். ஆனால், தற்போது பட்டு உற்பத்தி மட்டுமல்லாமல் மல்பெரி உற்பத்தியிலும் புர்ணியா பெண்கள் நம்பிக்கையளிக்கும் வகையில் முன்னேறி வருகின்றனர். அரசின் உதவியுடன் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற லாபத்தை தற்போது பெற்று வருகின்றனர்.
ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் நமது நாட்டின் பண்முகத்தன்மை அளப்பரியா புதையலாக உள்ளது. அதனை பாதுகாப்பதும், சரியாகப் பயன்படுத்துவதும் நம்மிடம் தான் உள்ளது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வரையில் அனைவரிடமும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போது அனைவரும் நேரில் அமர்ந்து ராக்கெட் ஏவப்படுவதை கண்டு ரசிக்க முடியும். இதற்காகவே 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்து வரும் பகீரதி அம்மா 10 வயதுக்குள்ளாக பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டவர். ஆனால், தற்போது 105 வயதிலும் 4ஆம் நிலைத் தேர்வை 75 சதவீத மதிப்பெண்களுடன் கடந்து அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவருக்கு நான் தலைவணங்குகிறேன்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹமிர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சல்மான். பிறந்தது முதல் மாற்றுத்திறனாளியாக உள்ள சல்மான், காலணி மற்றும் டிடெர்ஜெண்ட் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி 30 மாற்றுத்திறனாளிகள் வரை பயிற்சியும் அளித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 100 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளார். அவருடைய துணிவுக்கும், சுயதொழில் முனையும் திறனுக்கும் நான் தலைவணங்குகிறேன் என்று பேசினார்.