உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், "இன்று வரலாறு உருவாக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பு நான் எனது அமெரிக்க பயணத்தை 'ஹவுடி மோடி' உடன் தொடங்கினேன், இன்று எனது நண்பர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இந்திய பயணத்தை 'நமஸ்தே டிரம்ப்' உடன் ஆமதாபாத்தில் தொடங்குகிறார்" என்று தெரிவித்தார். அதில் மேலும் பேசியதாவது,
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் உங்களை மனதார வரவேற்கிறேன். இது குஜராத் ஆக இருந்தாலும் உங்களை வரவேற்பதில் ஒட்டுமொத்த நாடும் உற்சாகமாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் பெயரான 'நமஸ்தே' என்பதன் பொருள் மிகவும் ஆழமானது. இது உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதத்திலிருந்து வந்த ஒரு சொல். இதன் பொருள், அந்த நபருக்கு மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் என்பதாகும்.
இந்தியாவும், அமெரிக்காவும் தங்களுக்குள் நிறைய பகிர்ந்துகொள்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவை லட்சியங்கள், புதுமையான யோசனைகள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள், நம்பிக்கை மற்றும் திட்டங்களாகும்.
இந்தியா-அமெரிக்க இடையில் இனி சாதாரண உறவு என்பதைக் கடந்து மிகப் பெரிய மற்றும் நெருக்கமான நட்புறவாக மலர்ந்துள்ளது. ஒரு நாடு சுதந்திர மக்களுக்கானது, மற்றொன்று உலகம் ஒரே குடும்பம் என்று நம்புகிறது. ஒரு நாடு 'சுதந்திரதேவி சிலை' பற்றி பெருமிதம் கொள்கிறது, மற்றொரு நாடு 'ஒற்றுமையின் சிலை' பற்றி பெருமிதம் கொள்கிறது.
அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா இந்தியா வருகை தந்துள்ளது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான அமெரிக்காவுக்காக நீங்கள் செய்த பணி அதன் பலனைத் தருகிறது. குழந்தைகள் மற்றும் சமூகத்திற்காக நீங்கள் செய்த பணி பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கூடியிருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.