மத்திய அமைச்சரவை குழு, அடுத்த வாரம் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் , வரும் ஜனவரி 18-ம் தேதி முதல் 24 ம் தேதி வரை ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரு யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இந்த பயணத்தின்போது அமைச்சர்கள் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதோடு, அரசின் இந்த முடிவின் மூலம் மக்களுக்கு கிடைக்க கூடிய பலன்கள் மற்றும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.