பிகாரில் கரோனா தொற்று உறுதியானவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மூத்த அதிகாரிகளுடனான ஆலோசனைக்குக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கரோனா தொற்று உறுதியான மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிகார் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கரோனா தொற்று உறுதியானவர்கள் தங்களது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள போதுமான வசதி இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் தங்களது உடல்நிலை குறித்தும் அவர்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ளவேண்டும். இதற்காக அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள சுகாதார மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களுடன் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
வீட்டில் போதுமான வசதி இல்லாதவர்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள சுகாதார மையங்களை தொடர்பு கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
தேவைப்படும் போது நோயாளிகள் அருகில் உள்ள சுகாதார மையங்களில் உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் தற்போது 12,570 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 104 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 9,284 பேர் குணமடைந்துள்ளனர்.