ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரப் பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 6 பாலங்களை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
கிழக்கு லடாக்கில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீரில் புதிய பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா், எல்லைச் சாலைகள் அமைப்பின் தலைமை இயக்குநா் ஹா்பல் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஜம்மு மாவட்டத்தில் உள்ள அக்னூரில் அக்னூா்-பல்லன்வாலா சாலையில் 4 பாலங்களும் கதுவா மாவட்டத்தில் தா்னா நல்லா ஓடையின் குறுக்கே 2 பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்களை எல்லைச் சாலைகள் அமைப்பு ரூ.43 கோடி செலவில் கட்டி முடித்துள்ளது. புதிய பாலங்களைத் திறந்து வைத்த பிறகு ராஜ்நாத் சிங் பேசியதாவது:
சாலைகளும் பாலங்களும் நாட்டின் உயிராதாரமாக விளங்குகின்றன. மேலும், வெகுதொலைவில் உள்ள பகுதிகளின் சமூக-பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்று பரவலால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ள இந்த இக்கட்டான நேரத்திலும் எல்லைச் சாலைகள் அமைப்புக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கியதால் பாலம் கட்டுமானப் பணிகள் தடைபடவில்லை. அதன் பலனாக, 6 பாலங்களும் குறித்த நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றாா் ராஜ்நாத் சிங்.