உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகள் குறித்து சுட்டுரையில் கருத்துத் தெரிவித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது.
நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, "வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக ஏன் அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது?” என விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஜூன் 6 அன்று , பிரசாந்த் பூஷண் தனது சுட்டுரைப் பக்கத்தில், "கடந்த 6 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் அழிவில் உச்சநீதிமன்றத்தின் பங்கு" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், ஜூன் 29 அன்று, இந்தியாவின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஹார்லி டேவிட்சன் இரு சக்கர வாகனத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி, ஹெல்மெட் மற்றும் முகக் கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேற்கூறிய பதிவுகளின் அடிப்படையில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.