கர்நாடகத்தில் 100 வயது மூதாட்டி கரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹுவின ஹடகலியைச் சேர்ந்தவர் 100 வயது மூதாட்டி ஹல்லம்மா. இவருக்கு கடந்த 16ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் அந்த மூதாட்டி கரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளார். இதுகுறித்து ஹல்லமா கூறியதாவது, மருத்துவர்கள் எனக்கு நன்றாக சிகிச்சை அளித்தனர்.
வழக்கமான உணவோடு, நான் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டேன். மருத்துவர்கள் எனக்கு மாத்திரைகள் மற்றும் ஊசி போட்டார்கள், நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். கொவைட் -19 ஒரு ஜலதோஷம் போன்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த 3ஆம் தேதி வங்கியில் பணிபுரிந்து வரும் மூதாட்டியின் மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மூதாட்டி, மருமகள், பேரன் என அடுத்தடுத்து வீட்டில் இருந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஹல்லம்மா என்கிற 100 வயது மூதாட்டி தற்போது கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.