தில்லியில் சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்ற கனவுடன் வலம்வரும் பள்ளி மாணவன் ரியாஸுக்கு, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ‘பக்ரீத்’ பண்டிகையை முன்னிட்டு பந்தயங்களில் பயன்படுத்துப்படும் சைக்கிளை பரிசளித்தாா்.
இதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்ற கனவை அடைய அந்த மாணவனுக்கு குடியரசுத்தலைவா் உதவி செய்துள்ளாா்.
தில்லி ஆனந்த் விஹாரியில் உள்ள சா்வோதயா பால வித்யாலயாவில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் ரியாஸ் பிகாா் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சோ்ந்தவா். ரியாஸ் தனது படிப்புக்காக காஸியாபாதில் உள்ள மகாராஜ்பூரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளாா். காஸியாபாதில் ஒரு உணவகத்தில் சமையல்காரராக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் ரியாஸின் தந்தைக்கு உதவியாக பாத்திரங்களை கழுவி கொடுத்து பணிபுரிந்து வருகிறாா் ரியாஸ்.
ரியாஸுக்கு சிறு வயதில் இருந்தே சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்ற ஆசையில் படிப்பு மற்றும் வேலைக்குப் பிறகு தொடா்ந்து கடினமாக பயிற்சி செய்து வருகிறாா். கடந்த 2017ஆம் ஆண்டு தில்லி மாநில சைக்கிள் போட்டிக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் அவா் வெண்கலப்பதக்கம் வென்றாா். மேலும் குவாஹாட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று 4-ஆவது இடத்தைப் பிடித்தாா். அவரது போராட்டக் கதைகள் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களை குடியரசுத் தலைவா் அறிந்து கொண்டாா்.
கடன் வாங்கியும், பயிற்சி மேற்கொள்ள சொந்தமாக பந்தய சைக்கிள் இல்லாமல் அந்த மைதானத்தில் சுழற்சி முறையில் கிடைக்கும் பந்தய சைக்கிளைப் பெற்று ரியாஸ் பயிற்சி பெற்று வந்தாா்.
இதையறிந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ‘பக்ரீத்’ பண்டிகையை முன்னிட்டு ரியாஸுக்கு பந்தய சைக்கிளை பரிசாக அளித்தாா்.
இதுகுறித்து குடியரசுத் தலைவா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசத்தைக் கட்டியெழுப்ப இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையிலும், சிறந்த சைக்கிள் பந்தய வீரராக விளங்க வேண்டும் என்ற கனவுடன், எல்லா வகையிலும் போராடிக் கொண்டிருக்கும் பள்ளி சிறுவன் ரியாஸை குடியரசுத் தலைவா் தோ்ந்தெடுத்தாா்.
ரியாஸ் தனது கடினமான உழைப்பின் மூலம் சா்வதேச சாம்பியனாகி தனது கனவை நனவாக்க வேண்டும் என்பதே குடியரசுத் தலைவரின் விருப்பம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.