சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி அளவிலான நிவாரண சலுகைகளுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாலை 4 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.
இதன்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரண சலுகைகளை அறிவிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், சிறு குறு தொழில் நிறுவனங்களில் ரூ. 50,000 கோடி வரை முதலீடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10,000 வரை வங்கிகளில் கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 14 விவசாய விளை பொருள்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதத்திலிருந்து 83 சதவீதத்துக்கு உயர்த்தப்படுவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.