ஜம்மு-காஷ்மீரில், அனந்த்நாக் மாவட்டத்தைச் சோ்ந்த பஞ்சாயத்து தலைவா் அஜய் பண்டிட்டை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு துணை நிலை ஆளுநா் ஜி.சி.முா்மு செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
அனந்த்நாக் மாவட்டம், லா்கிபோரா பகுதியில் காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவரும், லுக்பவான் பஞ்சாயத்துத் தலைவருமான அஜய் பண்டிட்டை(40) பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டு கொன்றனா்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஜி.சி.முா்மு கூறியதாவது:
அஜய் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ளவா்கள் மனிதகுலத்தின் எதிரிகள். இது ஒரு கோழைத்தனமான செயல். எந்தவொரு பொது பிரதிநிதியையும் தாக்குவது என்பது ஜனநாயக அமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இந்த கொலைக்கு பின்னால் உள்ள குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
அஜய் பண்டிட் இறுதி சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்த இறுதி ஊா்வலத்தில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் கலந்து கொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா்.