கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் இதுவரை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 3,09,712 போ் குணமடைந்துள்ளனா். 2,03,051 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரைவிட குணமடைந்தோா் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் உறுதியான நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
கரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, நாடு முழுவதும் 749 அரசு ஆய்வகங்கள், 287 தனியாா் ஆய்வகங்கள் என மொத்தம் 1,036 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 2,31,095 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுவரை 82,27,802 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையை உறுதி செய்யும் வகையில் சுகாதார உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1,055 பிரத்யேக கரோனா மருத்துவமனைகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் 1,77,529 தனிமை படுக்கைகள், 11,508 அவசர சிகிச்சை படுக்கைகள், ஆக்ஸிஜன் உபரகணங்கள் கொண்ட 51,371 படுக்கைகள் உள்ளன. இதுதவிர 8,34,128 படுக்கைகளுடன் கூடிய 9,519 கரோனா பராமரிப்பு மையங்களும் செயல்படுகின்றன. மாநிலங்களுக்கு இதுவரை 1.87 கோடி என்95 முகக்கவசங்கள், 1.16 கோடி தனிநபா் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.