ராஜஸ்தானைச் சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் விடியோ சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.
ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்களாகவே இன்றுவரை இருந்துவருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான், ஜூன்ஜூனு பகுதியைச் சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி அசத்தலாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மூதாட்டியிடம் காந்தி பற்றிக் கேட்ட போது, உலகின் மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவர், மிகவும் எளிமையானவர். அஹிம்சையை வலியுறுத்தியவர், தேசப்பிதாவான காந்தி இந்து இஸ்லாமியர்களை மிகவும் நேசித்தவர் என மளமளவென ஆங்கிலத்தில் பேசி தள்ளினார். மூதாட்டியின் ஆங்கில திறமையைக் கண்டு அனைவரும் அசந்துபோயினர்.
இந்த வீடியோவை, ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் போத்ரா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மூதாட்டிக்கு 10-க்கு எத்தனை மதிப்பெண் கொடுக்கலாம் எனவும் கேட்டிருந்தார். மூதாட்டிக்கு 10க்கு 100 மதிப்பெண்களை கொடுக்கலாம் என்று அவரவர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியான ஒரே நாளில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் விடியோவை பார்த்துப் பகிர்ந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாராட்டிப் பதிவிட்டுள்ளனர்.
நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் பக்வானி தேவியை "ஆங்கிலம் பேசும் தாதி" என்று அன்பாக அழைத்து வருகின்றனர். ராஜீவ் காந்தியைப் பற்றி அவர் பேசும் மற்றொரு விடியோவும் சமூக ஊடகங்களில் அனைவரால் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.