புது தில்லி: செயற்கை சுவாசக் கருவிகளை ரூ.7,500க்கும் குறைவான விலையில் தயாரித்து விற்பனை செய்ய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் விதமாக அந்நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா குழுமத் தலைவா் ஆனந்த் மஹிந்திரா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்தப்படும் செயற்கை சுவாசக் கருவிகளை உருவாக்கும் பணியில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. செயற்கை சுவாசக் கருவிகள் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை விலை கொண்டது. ஆனால் மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பான அதிநவீன செயற்கை சுவாசக் கருவிகளின் விலை ரூ.7,500-க்கும் குறைவாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.
மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள செயற்கைக் சுவாசக் கருவிகள் கைகளில் வைத்தே பயன்படுத்தபடும் செயற்கை சுவாசக் கருவிகளின் பிரதியாக இருக்கும் எனவும், இந்தக் கருவிகளை தயாரிக்க 3 நாள்களில் ஒப்புதல் வழங்கப்படும் என நம்பப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.