விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலையில் இருந்து நேற்று அதிகாலை ஸ்டைரீன் என்ற விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், மயக்கமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு, எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், உயிர் சேதத்திற்காக எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனத்துக்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதவிர, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, நீதிபதி பி. சேஷாசயன ரெட்டி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் உத்தரவிட்டுள்ளார். இக்குழு வருகிற மே 18 ஆம் தேதிக்குள் விபத்து குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.