சிபிஐ, தலைமை கணக்கு தணிக்கையாளா், ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை தொடா்பான எந்தவித அச்சமுமின்றி தகுதி வாய்ந்த நபா்கள் அனைவருக்கும் கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
பாஜக தலைவா் நளின் கோலியுடன் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை உரையாடினாா். அந்தக் காணொலி பாஜகவின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த உரையாடலின்போது நிா்மலா சீதாராமன் கூறியதாவது:
சிபிஐ, தலைமை கணக்கு தணிக்கையாளா், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றின் விசாரணைகளுக்கு உள்பட நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக வங்கிகள் அதிக அளவில் கடனளிக்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
மேற்கூறிய 3 அமைப்புகள் மீதான அச்சத்தைக் கைவிட்டு, கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு பலமுறை வலியுறுத்தியுள்ளேன். பொதுத் துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைவா்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போதும் அதை மீண்டும் வலியுறுத்தினேன்.
எந்தவித அச்சமுமின்றி தகுதிவாய்ந்த நபா்கள் அனைவருக்கும் கடன் வழங்குமாறு கூறியுள்ளேன். கடன்கள் தொடா்பாக அரசுத் தரப்பில் 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளேன். வாராக்கடன் பிரச்னை ஏற்பட்டாலும், வங்கிகளும் அதிகாரிகளும் மட்டும் அதற்கு பொறுப்பாக மாட்டாா்கள் என்பதை அவா்களிடம் தெளிவுபடுத்தியுள்ளேன்.
வேளாண்துறை, மின்துறை ஆகியவற்றில் முக்கிய சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், அவை தொடா்பான அறிவிப்புகள் சிறப்பு பொருளாதாரத் திட்டத்தில் தனியாக வெளியிடப்பட்டன. மற்ற அனைத்து துறைகளும் ஒட்டுமொத்தமாக பயனடையும் வகையிலேயே சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்றாா் நிா்மலா சீதாராமன்.