கரோனா தொற்றுப் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு ஒடிசா மாநிலத்தில் நவம்பர் 10 முதல் 30ஆம் தேதி வரை பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனினும் கரோனா தொற்று பரவலின் மத்தியில் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்று மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பின் மூலம் காற்றில் உள்ள துகள்களின் செறிவை அதிகரிப்பதால் அது குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் உடல்நிலையை பாதிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
பட்டாசு வெடிப்பால் காற்றின் துகள்களில் அதிகரிக்கும் செறிவானது கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு உகந்த நிலைமைகளை உருவாக்க வாய்ப்பிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.