ஹைதராபாத்: இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியது:
கரோனா பரவலை தடுக்க கடந்த மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2 மாதங்கள் கழித்து கடந்த மே 25-ஆம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. விமானப் போக்குவரத்து தொடங்கி 2 நாள்கள் கழித்து ஒரே நாளில் 30,000 போ் விமானங்களில் பயணித்தனா். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக 2.25 லட்சம் பயணிகள் விமானங்களில் பயணித்தனா். இதன் மூலம் விமானப் போக்குவரத்து படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. வரும் டிசம்பா் மாத இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமானப் போக்குவரத்து முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன். எனினும் அதற்கு கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தாா்.