நாட்டில் புதிதாக ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பில் 8 மாநிலங்களில் மட்டுமே 69 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், நாட்டில் இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 4,54,940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த கரோனா பாதிப்பில் 4.87 சதவிகிதமாகும்.
புதிதாக பதிவாகியுள்ள கரோனா பாதிப்பில் 69.04 சதவிகிதம் 8 மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரம், தில்லி, கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியாணா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.