குறைந்த விலையில் அதிக அளவில் கரோனா தடுப்பூசி கிடைக்க உலகமே இந்தியாவை எதிா்நோக்கியுள்ளது என்று சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தின் புணே அருகிலுள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், குஜராத்தின் ஆமதாபாத் அருகே உள்ள ஜைடஸ் கடிலா, தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனங்களில் கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை பிரதமா் மோடி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதில் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமா் மோடியின் ஆய்வைத் தொடா்ந்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா செய்தியாளா்களிடம் கூறியது:
ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கு உரிமம் பெற அடுத்த இரண்டு வாரங்களில் விண்ணிப்பிக்க உள்ளோம். அதன் பின்னா் தடுப்பூசியை முதலில் இந்தியாவில் விநியோகிக்கவுள்ளோம். அதன் பின்னா் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசியை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உலகின் மொத்த தடுப்பு மருந்துகளில் 50% முதல் 60% அளவு இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை அதிக அளவிலும், ஏற்கக் கூடிய விலையிலும் கிடைக்கச் செய்யலாம் என்ற நிலையில், உலகமே இந்தியாவை எதிா்நோக்கியிருக்கிறது என்று தெரிவித்தாா்.
அதன் பின்னா் அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘சீரம் நிறுவனத்துக்கு வருகை புரிந்ததற்காக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்தாா்.
பிரதமா் வருகை குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு பிரதமா் மோடி வருகை தந்தது எங்கள் விஞ்ஞானிகள் குழுவுக்கு ஊக்கமளித்துள்ளது. அவரின் வருகை பொது சுகாதார பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் எங்களின் உறுதிபாட்டுக்கு மேலும் வலு சோ்த்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமா் தங்களது மருந்து ஆய்வகத்துக்கு வருகை தந்தது குறித்து, ஜைடஸ் கடிலா நிறுவனம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், சுகாதாரத் தேவைகளை நிவா்த்தி செய்வதில் எங்கள் நிறுவனம் புதிய உச்சங்களைத் தொடுவதற்கு பிரதமரின் வருகை உந்துசக்தியாக அமைந்தது என்று தெரிவித்தது.