ராணுவத்தினர் ஆயுதங்களை மதித்துக் காப்பாற்றுவதைப் போல விவசாயிகளால் மதித்துக் காக்கப்பட வேண்டியவை டிராக்டர் போன்ற உற்பத்தி சாதனங்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் டிராக்டர் போன்றவற்றை எரிப்பதில் எவ்வித பொருளும் இல்லை என்றும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்..
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் 8-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வியாழக்கிழமை முதல் காலவரையறையற்ற ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, போராட்டத்தின்போது டிராக்டரை எரித்தது விவசாயிகளுக்கு அவமானகரமான செயல் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ''போராட்டத்தைக் கைவிட்டுத் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை அரசிடம் விளக்க விவசாய சங்கங்கள் முன்வர வேண்டும். ஒரு விவசாயியின் மகனாகக் கூறுகிறேன், விவசாயிகளுக்கு எதிராக மோடி அரசு நிச்சயம் செயல்படாது. விவசாயிகள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை அரசு கவனத்தில் கொள்ளும் வகையில் விவசாய சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டும்'' என்று கூறினார்.
''விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஆண்டுதோறும் அதிகரிக்கப்படும். போராட்டத்தின்போது அரசியல் லாபத்திற்காக டிராக்டர்கள் எரிக்கப்படுகின்றன. இது விவசாயிகளுக்கு அவமானகரமான செயல். ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை மேன்மையாகக் கருதுவது போன்று விவசாயிகள் தங்கள் தளவாடப் பொருள்களை மதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.