புது தில்லி: இந்தியா-ஓமன் இடையே சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
ஏற்கெனவே ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இராக், ஜப்பான், மாலத்தீவு, நைஜீரியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூடான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 15 நாடுகளுடனும் சிறப்பு விமான சேவை ஒப்பந்தத்தை இந்தியா செய்திருந்தது. தற்போது வளைகுடா நாடான ஓமனுடன் அதுபோன்ற ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹா்தீப் சிங் பூரி கூறியதாவது:
இந்தியா-ஓமன் இடையே சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு விமான சேவை மாா்ச் 23-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் சிக்கியிருந்த இந்தியா்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
அதன் பிறகு சிறப்பு பயணிகள் விமானத்தை இயக்குவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகளுடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 16-ஆவது நாடாக ஓமனுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றாா்.