மும்பை: போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்ரவர்த்தி, அவருடைய சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி ஆகியோரது நீதிமன்றக் காவல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையின்போது, போதைப் பொருள் கும்பலின் பின்னணி தெரியவந்ததையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸôரும் (என்சிபி) விசாரணை நடத்தினர். இதில், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பிருப்பதாக நடிகர் சுஷாந்த்தின் தோழியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, அவருடைய சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையே, ரியா, அவரது சகோதரர் ஷோவிக்கின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தீபிகா படுகோனே, சிரத்தா கபூர் உள்ளிட்டோரிடம் என்சிபி விசாரணை மேற்கொண்டது.