ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆதாரங்களை அழிக்கும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
மேலும், இளம்பெண்ணின் உடலை அவர்களது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினரே தீயிட்டு எரித்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் ஆதாரங்களை அழிக்கும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தலித் உரிமை ஆர்வலரான சேதன் ஜனார்தன் தொடர்ந்த இந்த வழக்கில், ஹாத்ரஸ் வழக்கில் ஆதாரங்களை அழிக்கும் வகையில் செயல்பட்ட
காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகள் என மாநில அதிகாரிகளின் செயல் குற்றவாளிகளைக் காக்கும் வகையில் உள்ளது.
இதுபோன்ற தவறான அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழும் நிலையில், அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்து வைக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைவதற்கு முன்பே, பல உயர் அதிகாரிகள் உயிரிழந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டனர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம்பெண் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி நள்ளிரவில் காவல்துறையினரால் எரிக்கப்பட்டதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநில காவல்துறைக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையிலான தெளிவான உறவை குறிக்கிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.