கொல்கத்தா: கரோனா உபகரணங்கள் மீது ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசுக்கு அம்மாநில தனியார் மருத்துவமனைகள் கோரிக்கை வைத்துள்ளன.
மேற்குவங்கத்தில் கரோனா பரிசோதனைக்கான விலை 2,500 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர ஊர்தி சேவைக்கான கட்டணமும் இறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனைகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
எனினும், கரோனா மருத்துவ உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியையும் குறைக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகள் கோரிக்கை வைத்துள்ளன.
இது குறித்து தனியார் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கரோனா பரிசோதனைக்கு மாநில அரசு நிர்ணயித்துள்ள 1,500 ரூபாய் என்ற விலையில் மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
எனினும் அரசு நிர்ணயித்துள்ள இந்த விலையை மருத்துவமனையின் பராமரிப்பு, சோதனை கருவி மற்றும் உள்கட்டமைப்பு செலவு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள் கடந்த எட்டு மாதங்களாக இழப்பை சந்தித்து வருகின்றன, இது எங்கள் நிலையை மேலும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசு நிர்ணயித்துள்ள இந்த விலையை ஏற்றுக்கொண்டு கரோனா பரிசோதனையை செய்ய தயாராக உள்ளோம். ஆனால், கரோனா பரிசோதனை மேற்கொள்ள உதவும் உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க அரசு முன்வர வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகள் கோரிக்கை வைத்துள்ளன.