தெலங்கானாவில் தொடர் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
தெலங்கானாவில் கடந்த மூன்று நாள்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் முதல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வாகனங்கள் அடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹைதராபாத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பலியானோரின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில் மீட்புப் பணிகளில் காவல்துறையினருடன், மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே தொடர் கனமழையில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கனமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத மதிப்புகளை கணக்கிட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கும் வகையில் அறிக்கை தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தியுள்ளார்.