குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்துவது பற்றிய பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவின் கருத்து துரதிருஷ்டவசமானது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சிஏஏ பற்றி நட்டா திங்கள்கிழமை பேசியதாவது:
"கரோனா தொற்று காரணமாக சிஏஏ-வை அமல்படுத்துவது தாமதமாகியுள்ளது. விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்."
நட்டாவின் கருத்து குறித்து அசோக் கெலாட் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"கரோனா தொற்று தொடங்குவதற்கு முன்பே, நாட்டில் பதற்றமான சூழல் நிலவியது. சிஏஏவை அமல்படுத்துவதில் பாஜக முனைப்பு காட்டியதால் பல்வேறு பகுதிகளில் நிலைமை மிகவும் பதற்றமாக இருந்தது.
தற்போது கரோனா தொற்று தீவிரமாக உள்ளது. எனினும், பாஜக பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது. நாடு எதிர்கொண்டு வரும் சிக்கலை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய நேரமிது. அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் கெடுக்கக் கூடாது."