தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான நரசிம்ம ரெட்டி காலமானார். அவருக்கு வயது 76.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மூத்தத் தலைவரான நரசிம்ம ரெட்டி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 12.25 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிவதற்கு முக்கியப்பங்காற்றிய நரசிம்ம ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசாங்கத்தில் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தலைமையின் கீழும் நரசிம்ம ரெட்டி பணியாற்றியுள்ளார்.
அவரது மறைவுக்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், பாஜக மாநிலத் தலைவர் பந்தி சஞ்சய் குமார், காங்கிரஸ் மாநிலத் தலைவர் என். உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், நரசிம்ம ரெட்டியின் உடலுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யப்படும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.