ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் நடக்கும் அநியாயங்களையும் கவனிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ''6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது'' என்று குறிப்பிட்டார்.
''அரசியல் பயணம் மேற்கொள்வதற்கு பதிலாக ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சோனியா காந்தியோ, ராகுல்காந்தியோ அல்லது பிரியங்கா காந்தியோ நேரில் சென்று சந்திக்க வேண்டும்.
இவர்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுகின்றனர். ஆனால் ஹாத்ரஸ் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை புகைப்படத்திற்காக சந்திகின்றனர். தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களின் பிரச்சனைகளையும் ராகுல்காந்தி கவனிக்க வேண்டும்'' என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.