கரோனா தொற்றால் ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபால் தேசியப் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் நவம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசியப் பூங்கா கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பாதிப்பால் மூடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தொற்றுப் பரவலின் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் சிமிலிபால் தேசியப் பூங்கா மீண்டும் திறக்கப்பட உள்ளதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
அதனையொட்டி வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற நோய் தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரஸ் பரவாமல் தடுக்க சுற்றுலாப் பயணிகள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல் மற்றும் முகக்கவசங்களை அணிவது போன்ற கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.