பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பப்ஜி செயலி
இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிளே ஸ்டோரிலிருந்து அவை வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டன.
இந்தியாவின் கிழக்கு லடாக்கில் இந்திய சீன எல்லைப் பிரச்னை எழுந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்ஸிலிருந்து பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகள் நீக்கப்பட்டன. இதனால் வியாழக்கிழமை வரை தரவிறக்கம் செய்யப்பட்டு வந்த இந்த செயலிகள் இனி கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஏற்கெனவே ஸ்மார்ட்போன்களில் நிறுவப்பட்ட பப்ஜி செயலியை அதன் பயனர்கள் இயக்க முடியும். டிக்டாக்கைப் போல் பப்ஜி செயலி இதுவரை நாட்டில் தனது சேவையை நிறுத்தவில்லை.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் இதேபோல் பாதுகாப்பு குறைபாட்டு காரணங்களைக் குறிப்பிட்டு டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.