விமானங்களில் ஒலிப்பதிவு கருவிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹிந்தி திரைப்பட நடிகா் சுஷாந்த் சிங் மரணம் தொடா்பான சுட்டுரைப் பதிவால் சா்ச்சையில் சிக்கியிருக்கும் நடிகை கங்கனா ரணாவத், கடந்த 9-ஆம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் சண்டீகா்-மும்பை பயணிகள் விமானத்தில் முன்வரிசை இருக்கையில் அமா்ந்திருந்தாா். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக பத்திரிகை நிருபா்களும், புகைப்படக் கலைஞா்களும் விமானத்துக்குள் முண்டியடித்து நுழைந்தனா். இதையடுத்து தனிநபா் இடைவெளி மற்றும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பத்திரிகையாளா்கள் நடந்துகொண்டது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இண்டிகோ நிறுவனத்தை டிஜிசிஏ வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.
அதன் பின்னா் விமானங்களில் புகைப்படம் எடுக்கத் தடை விதித்து டிஜிசிஏ சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு விமானங்களில் யாரேனும் புகைப்படம் எடுத்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விமானம் 2 வாரங்களுக்கு இயக்கப்படாது என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், விமானங்களில் ஒலிப்பதிவு கருவிகளை பயன்படுத்த மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக டிஜிசிஏ விளக்கமளித்துள்ளது. இதுதொடா்பாக டிஜிசிஏ ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
விமானங்களில் புகைப்படம் எடுக்கவோ, விடியோ எடுக்கவோ தடையில்லை. ஆனால் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி விமான சேவைக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒலிப்பதிவு கருவிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு மீறப்பட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.