கரோனா பாதிப்பால் பலியான மருத்துவப் பணியாளர்களின் விவரங்கள் பராமரிக்கப்படாததைக் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் தொற்று பாதிப்பால் பலியான மருத்துவப் பணியாளர்களின் விவரங்கள் எதுவும் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை என கடந்த வியாழக்கிழமை சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி செளபே நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டக் கேள்விக்கு பதிலளித்திருந்தார். மத்திய அரசின் இந்த பதிலுக்கு இந்திய மருத்துவ சங்கம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து தனது சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “மருத்துவப் பணியாளர்களுக்கு தட்டுக்களைத் தட்டுவது, விளக்கை ஏற்றுவதைக் காட்டிலும் அவர்களுக்கு உரிய மரியாதை மற்றும் பாதுகாப்பை வழங்குவது முக்கியம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மோடி அரசாங்கம் கரோனாவிற்கு எதிராக போராடுபவர்களை ஏன் அவமதிக்கிறது?” எனவும் அவர் தனது சுட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.