மூத்த அணு விஞ்ஞானியும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் சேகர் பாசு கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி தெரிவிக்கையில்,
டாக்டர் சேகர் பாசுவுக்கு வயது 68. அவர் கடந்த சில நாள்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், கரோனா வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இயந்திர பொறியியலாளரான டாக்டர் பாசு அணுசக்தி திட்டத்தில் சிறந்த பங்களிப்புக்காக, 2014-இல் பத்மஸ்ரீ விருது பெற்றார். மேலும், இந்தியாவின் முதல் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்த் உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.