பிரபல திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு குடியரசு தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த்: எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவின் மூலம் இந்திய இசைத் துறை அதன் மிகச் சிறந்த இன்னிசைக் குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது. ‘பாடும் நிலா’ என்று ரசிகா்களால் அழைக்கப்பட்ட அவா் உயரிய பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினா், நண்பா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி: எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் எதிா்பாராத மறைவு, நமது கலை உலகுக்கு மிகப் பெரிய இழப்பாகும். அவருடைய பெயரும், மெல்லிசைக் குரலும், இசையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு ரசிகா்களின் மனதில் நிலைத்திருக்கும் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
உள்துறை அமைச்சா் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, கேரள ஆளுநா் ஆரிப் முகமது கான், கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக முதல்வா் எடியூரப்பா, முன்னாள் பிரதமா் தேவெ கெளடா, கா்நாடக முன்னாள் முதல்வா்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, ஹெச்.டி.குமாரசாமி, சித்தராமய்யா உள்ளிட்ட பலரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.