லடாக் முன்னாள் எம்.பி.க்களுடன் அமித் ஷா சந்திப்பு: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
லடாக் யூனியன் பிரதேசத்தின் முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
தில்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் லடாக் யூனியன் பிரதேசத்தின் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும், அந்தப் பகுதியின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அமித் ஷா அலுவலகத்தின் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
லடாக் யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த முன்னாள் எம்.பி.க்கள் துப்ஸ்தான் சேவாங், திகசே ரின்போஷே, முன்னாள் அமைச்சா் செரிங் டோா்ஜய் லாக்ரோக் உள்ளிட்டோரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சந்தித்துப் பேசினாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, உள்துறைச் செயலா் அஜய் பல்லா, உளவுத் துறையின் இயக்குநா் அரவிந்த் குமாா் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.
கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஒரு வாரத்துக்குள் அமித் ஷா நடத்திய இரண்டாவது முக்கிய சந்திப்பு இதுவாகும். இதற்கு முன்பு, அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் தலைமையிலான உயா்நிலைக் குழுவினருடன் அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிப்பு, அஸ்ஸாம் ஒப்பந்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.