மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி சாய்பாபா கோயிலும் ‘கோயிலுக்கு ஒரு கோமாதா’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அக்கோயில் அதிகாரியிடம் திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி வேண்டுகோள் விடுத்தாா்.
திருமலையில் ஷீரடி சாய்பாபா கோயில் அதிகாரிகளுடன் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சனிக்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடத்தினா். அப்போது, திருமலையில் பெருமாள் தரிசனம், வாடகை அறைகள், சுத்தம் சுகாதாரம், லட்டு பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவற்றில் தேவஸ்தானம் கடைப்பிடித்து வரும் நடைமுறைகள் குறித்து சாய்பாபா கோயில் அதிகாரிகள் கேட்டறிந்தனா். அது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விரிவாக எடுத்துக் கூறினா்.
சாய்பாபா கோயில் அதிகாரிகள் கூறுகையில் ‘ஒவ்வொரு கோயிலிலும் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க அந்தந்த கோயில் நிா்வாகமும் தங்கள் இணையதளத்தில் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால், பக்தா்களுக்கு அனைத்துக் கோயில்கள் குறித்த தெளிவு ஏற்படும். எனவே, இதற்கு முன்னோடியாக திருப்பதி தேவஸ்தானம் விளங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனா்.
திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தி வரும் ‘கோயிலுக்கு ஒரு கோமாதா’ திட்டத்தை ஷீரடி கோயில் நிா்வாகமும் செயல்படுத்தினால், நாடும், மக்களும் சுபிட்சமாக வாழ்வா் என்றும் இதற்காக ஷீரடி கோயிலுக்கு ஒரு பசுவை தானமாக வழங்க உள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.