கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோட்டில் இருந்து 12 பேர், எர்ணாகுளத்தில் இருந்து 3 பேர், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 8 பேர், பாலக்காட்டில் இருந்து ஒருவர் ஆகியோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 191 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர். 67 பேருக்கு நோய்த் தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்ததால் பரவியுள்ளது. 7 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.