மேற்கு வங்கத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் தற்போது 1590 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹவுரா மாவட்டத்தின் கோலாபரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 57 வயது நபர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். அவருக்கு எவ்வாறு கரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோன்று, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெல்கோரியாவில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலை மற்றொரு நபர்(57 வயது) உயிரிழந்தார். இரண்டாவது நபருக்கு வெளிநாடு அல்லது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் பயணம் செய்த வரலாறு இல்லை ஆனால், கடந்த கடந்த 20 ஆண்டுகளாக அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் சமீபத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது மேற்குறிப்பிட்ட இருவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.