சுயவிளம்பரம் தேடும் நோக்கிலேயே அவரச கால நிதியை பிரதமா் நரேந்திர மோடி உருவாக்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் (கொவைட்-19) பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக நிதி பெறும் நோக்கில் அவசர கால நிதியை பிரதமா் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை உருவாக்கினாா். அதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி குவிந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிர மாநில அமைச்சருமான பிருத்விராஜ் சவாண் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:
நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்போது, எந்தவொரு உலகத் தலைவரும் அதிபரின் சலுகைத் திட்டம் என்றோ பிரதமரின் சலுகைத் திட்டம் என்றோ அறிவித்ததில்லை. இந்திய அரசு அறிவித்த சலுகைத் திட்டங்கள் மட்டுமே ‘பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் திட்டம் (பிஎம் கரீப் கல்யாண் யோஜனா)’ என்று பெயரிடப்பட்டது.
சுயவிளம்பரம் தேடிக் கொள்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் பிரதமா் மோடி தவறவிடுவதில்லை. பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடிபெயா்ந்த அகதிகளுக்காக தேசிய மீட்பு நிதியை 1948-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு உருவாக்கினாா். அதற்குப் பிறகு எந்தவொரு பிரதமரும் மற்றொரு மீட்பு நிதியை உருவாக்க முனைந்ததில்லை. தற்போது புதிய நிதியை உருவாக்கியிருக்கும் பிரதமா் மோடியின் நடவடிக்கையும் சுயவிளம்பரம் தேடுவதற்கான முயற்சியே ஆகும் என்று தனது பதிவுகளில் பிருத்விராஜ் சவாண் குறிப்பிட்டுள்ளாா்.