கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வா்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடி வருகிறார்.
தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய பலருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய அளவில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பிரதமா் மோடி, மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கரோனாவுக்கு மாநில அரசுகள் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு உத்தரவு மாநிலங்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து முதல்வா்களிடம் பிரதமர் பேசுவார் என்று தெரிகிறது.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தலைமைச் செயலகத்தில் இருக்கும் நிலையில், காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடியுடன் பேசுகிறார்.
முன்னதாக, கடந்த 20-ஆம் தேதியும் மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி காணொளி காட்சி முறையில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.