புது தில்லி: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விடியோ மூலம் பிரதமர் மோடி தகவல்களைப் பகிர உள்ளார்.
கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, இரண்டு முறை நாட்டு மக்களிடையே நேரடியாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விடியோ ஒன்றை பகிர உள்ளதாகவும், அதன் மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிர்ந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் பகிரவிருக்கும் விடியோ எது தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கும் என்பதை சொல்லாமல், நாளை காலை 9 மணிக்கு விடியோ ஒன்றை நாட்டு மக்களுக்கு பகிரவிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று 9வது நாள் ஆன நிலையில், மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், உயிரிழப்பு 50 ஆக உள்ளதாக மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.