மைசூரு: பிரதமர் மோடி கூறியபடி விளக்கு ஏற்றினால் வெப்பத்தில் கரோனா வைரஸ் இறந்து விடும் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான நமது வலிமையை உணா்த்தும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமையன்று விடியோ செய்தி மூலமாக அழைப்பு விடுத்தாா். இது நம்பிக்கையின் அடையாளமாக பார்கப்படுகிறதே ஒழிய அறிவியல் ரீதியிலான எந்த காரணமும் இல்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி கூறியபடி விளக்கு ஏற்றினால் வெப்பத்தில் கரோனா வைரஸ் இறந்து விடும் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் ராமதாஸ். வெள்ளியன்று பிரதமர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, சனிக்கிழமையான நேற்று இவர் எம்.ஜி சாலை சந்தைப் பகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் தீபச் சட்டிகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘பிரதமர் மோடி கூறியதற்கு அறிவியல் ரீதியிலான காரணம் உண்டு. பிரதமர் மோடி கூறியபடி இருட்டில் விளக்கு ஏற்றினால், அதனால் ஈர்க்கப்பட்டு அங்கு வரும் கரோனா வைரஸ் வெப்பத்தில் இறந்து விடும்’ என்று தெரிவித்துள்ளார்.