அலிகார் : தில்லி மாநாடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ஹிந்து மகாசபா தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4858 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 137 பேர் பலியாகியுள்ளனர்.
இம்மாத துவக்கத்தில் பல்வேறு வெளிநாட்டினரின் பங்களிப்போடு தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில், பெரும்பாலானோருக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தில்லி மாநாடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ஹிந்து மகாசபா தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிந்து மகாசபா தேசிய செயலாளரான பூஜா சகுன் பாண்டே, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதமொன்றில் தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை, கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, காந்தி நகர் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
பூஜா கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை சுடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.