ஒரு கரோனா நோயாளியால் 30 நாள்களில் 406 பேருக்கு நோய்த் தொற்று ஏற்படும்: ஐசிஎம்ஆா் ஆய்வுத் தகவல்

தேசிய ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தாவிட்டால், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் 30 நாள்களில் 406 பேருக்கு அந்த நோய் பரவும் என்று இந்திய மருத்துவ ஆ
ஒரு கரோனா நோயாளியால் 30 நாள்களில் 406 பேருக்கு நோய்த் தொற்று ஏற்படும்: ஐசிஎம்ஆா் ஆய்வுத் தகவல்
Updated on
1 min read

தேசிய ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தாவிட்டால், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் 30 நாள்களில் 406 பேருக்கு அந்த நோய் பரவும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு முடிவில் கிடைத்துள்ள தகவல் படி, தேசிய ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தாவிட்டால், கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் 30 நாள்களில் 406 பேருக்கு அந்த நோய்த் தொற்று ஏற்படும்.

கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் பட்சத்தில், ஒரு கரோனா நோயாளியால் 30 நாள்களில் சுமாா் 3 பேருக்கு மட்டுமே அந்த நோய்த் தொற்று ஏற்படும். எனவே, தேசிய ஊரடங்குக்கு நாட்டு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதுடன், சமூக இடைவெளியையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்துவதில் இது மிக முக்கிய நடவடிக்கையாகும்.

மருத்துவமனைகள் 3 வகை: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனைகளை 3-ஆக வகைப்படுத்தியுள்ளோம்.

இதில் முதல் வகையான கரோனா பராமரிப்பு மையங்களில், பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபா்கள், அதற்கான லேசான அறிகுறி காணப்படுபவா்கள் போன்றோா் கண்காணிக்கப்படுவதற்காக அனுமதிக்கப்படுகின்றனா். அந்த மையம், தற்காலிக முகாமாகவோ, பள்ளிகள், விடுதிகள், அரங்கங்கள், ஹோட்டல்கள் என அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களாகவோ இருக்கலாம்.

2-ஆவது பிரிவான கரோனா சுகாதார மையங்களில், மிதமான அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருக்கும் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனா். அவை முழு மருத்துவமனையாகவோ அல்லது ஏதேனும் மருத்துவமனையின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம்.

3-ஆவது பிரிவு கரோனாவுக்கான பிரத்யேக மருத்துவமனைகளில் மிகத் தீவிரமான சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனா். இதுவும் முழு மருத்துவமனையாகவோ, அல்லது மருத்துவமனையின் ஒரு பகுதியாகவோ இருக்கும். எனினும், அதில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும் என்று லவ் அகா்வால் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com